என்னைக் கவர்ந்தவர்கள்...!!!! 3/29/2009

அமிர்தவர்ஷிணி அம்மா எழுதிய தலைப்பு இது.சிதறல்கள் தீபாவும் இந்த தலைப்பில் நன்றாகவே எழுதி வருகிறார்.தலைப்பை கடன் வாங்கி எழுத தூண்டியது நான் சந்தித்த சில மனிதர்களே.இந்த பதிவை அவர்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எங்க ஊர் கோலப்பொடி தத்தா:

கரகாட்டக்காரனில் "குடகுமலை காற்றில் வரும்" பாடலில் வருவது போன்ற மாட்டு வண்டியில் தனது மனைவியுடன் கோலப்பொடி விற்க வருவார். "கோஓஓஓலப்பொடியேயேய்" என்று அவர் குரல் தெருவிலிருந்து 100 அடி தள்ளி உள்ளே இருக்கும் எங்கள் வீட்டுக்குள் துல்லியமாக கேட்கும். அப்படி ஒரு கணீர் குரல்.நான் பள்ளி செல்லும் வயதில் பார்க்கும்போதே அவரது ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பச்சை நிற துணியால் மூடப்பட்ட கண்களில் கண்ணாடி அணிந்துகொண்டு, தலை நரைத்து முதுமையை வெகு காலத்துக்கு முன்னமே சந்தித்து விட்டிருந்தார். ஆனால் அந்த வயதிலும் ஒரு நாள் தவறாமல் மாலை 4 மணிக்கு எங்கள் தெரு பக்கம் அவர் குரலை கேட்க முடியும்.தொழிலிலும் கறாரான பேர்வழி அவர் .அவருக்கு நிறைய சொத்து உண்டு என்று ஊரில் சொல்லுவர்.இருப்பினும் சோம்பி உட்காராமல் உழைத்த அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேசன்.கல்லூரி படிக்கும் காலத்திலும்கூட விடுமுறையில் ஊருக்கு வரும்போதும் அவரது குரலிலோ அவரது கம்பீரத்திலோ குறை ஏதும் இருக்கவில்லை.பணி நிமித்தமாக வெளியூர் வந்த பிறகு அவரை அவ்வப்போது கூட பார்க்கும் வாய்ப்பு இல்லை.இவ்வளவு கால இடைவெளியில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டிருக்கலாம்.அயராத உழைப்பு என்றதும் இன்றும் என் நினைவில் வருபவர் இவர்தான்.



1 comments:

  • Prabhu
     

    எனக்கும் இது போல அனுபவம் உள்ளது, உங்கள் பதிவை படிக்கையில் என் மனதில் பழைய நினைவுகள் ஏராளம்!!! நன்றி!!

Post a Comment