பறக்கும் மகிழுந்து..!!!! 7/01/2009


அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் செயல்படும் 'டெர்ராபியூசியா டிரான்சிசன்' எனும் நிறுவனம் 'பறக்கும் கார்' கண்டு பிடித்து போக்குவரத்துத்துறையில் புதிய புரட்சியைப் படைக்க வித்திட்டுள்ளது.

ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர்.


அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.

இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும்.

மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்ணில் பறக்கும்போது இந்தக் கார் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதிக பட்சமாக ஒரே மூச்சில் 725 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பறக்கும் காரில் பயணம் செய்ய முடியும். இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்குள் பறக்கும் கார்கள் வர வாய்ப்புள்ளது. பறக்கும் கார் சகஜமாக புழக்கத்துக்கு வர இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

நன்றி:நியுசொநியுஸ்



 வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் வாழ்க்கை...!!! 6/30/2009






























 எனது 32 பதில்கள்...!!!! 6/22/2009

வணக்கம் நண்பர்களே....
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறேன்.
வைரசின் கைவரிசையால் நமது வலைப்பூ முடக்கப்பட்டு விட்டது.அதிலிருந்து மீண்டு வரவே இவ்வளவு நாள் எடுத்தது.

இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்த ஜோ அவர்களுக்கு நன்றி.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சொந்தப்பெயரை கேட்டால்,4 வருடத்திலிருந்து மிகவும் பிடிக்கும். அருமையான கணவர் கிடைக்க முகாந்திரமாய் இருந்ததால்.மேலும்,நண்பர்கள் எங்களையும் எங்கள் பேர் பொருத்தத்தையும் பார்த்து, "பேருக்கேத்த மாதிரி இருக்கீங்க போங்க" எனும்போது மிகவும் பிடிக்கும் :)

வலைபெயரை கேட்டால்,அது நானே வச்சுகிட்டது.எனவே பிடித்துதான் தேர்ந்தெடுத்திருப்பேன் இல்லையா? :)


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நண்பர் நர்சிம் அவர்களின் "தந்தை என்பவன்..." சிறுகதை படித்து முடித்தபோது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
மிகவும் பிடிக்கும். பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு பெரு மதிப்பை பெற்று தந்துள்ளது. சென்ற முறை ஈரோட்டுக்கு ஜவுளி எடுக்க சென்றபோது,எனது 10-ம் வகுப்பு வரலாற்று ஆசிரியையை சந்திக்க நேர்ந்தது.எனது கணவரை அறிமுகப்படுத்தியதும் என்னவரிடம் அவர் சொன்னது: "கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும்ங்க.மேப் எல்லாம் அருமையா போடுவாள்.பள்ளியிலேயே ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாணவி இவள்."
(இனிமே ஏதாவது லொள்ளு பண்ணீங்க கட்டம் கட்டி மேப் போட்ற வேண்டியதுதான் :)))

4.பிடித்த மதிய உணவு என்ன?
காலை,மதியம்,இரவு என்று எப்போதுமே எனக்கு பிடித்த உணவு: பிரியாணி-அது சைவ பிரியாணியாக இருந்தாலுமே...ஹிஹிஹி. (அதுக்காக மூணு வேளையும் அதுதானான்னு கேக்காதிங்க :))

அப்புறம் இட்லி+கறிக்குழம்பு. இது இரண்டும் என்னுடைய அம்மாவின் கைபக்குவமாக இருக்கும் பட்சத்தில் மிகவும் பிடித்த உணவு வகைகளாகி விடும் :)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே எல்லாம் வாய்ப்பே இல்லை.பெரும்பாலானவர்கள் கூறியது போல அலைவரிசை ஒத்து போனால் மட்டுமே பழகவே ஆரம்பிப்பேன். நட்பு என்னும் நிலைக்கு உயர சில காலம் பிடிக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களுடைய மேனரிசத்தை.பிறகு கண்களை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது-கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முடிந்த அளவு அதில் முயற்சியுடன் ஈடுபடுவது.

பிடிக்காதது
-பிற்பாடு புரிந்துகொள்வேன் என்றாலும் அந்த நிமிடம் முட்டாள்தனமாக பொத்துக்கொண்டு வரும் முன்கோபம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது-இக்கட்டான கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலிலும் நிதானம் இழக்காமல் இருப்பது,பிறரை காயப்படுத்தாத குணம்.

பிடிக்காதது
-ரொம்ப்ப்ப்ப விட்டுக்கொடுப்பது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
இரண்டு பேரின் பெற்றோர்களும்.
(ஓவர் சீன போடறாங்கப்பு.இருக்கிற எடமே சொர்க்கம்னு சொல்லிக்கிட்டு இங்க இருக்கிற பெங்களூருக்கு வந்து சேந்தாப்போல ஒரு வாரம் தங்க மாட்டேங்கறாங்க.)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பழுப்பு நிறம்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
"கண்போன போக்கிலே கால் போகலாமா" என்ற நம் வாத்தியார் பாடல் :) எம்ஜியாரின் பரம ரசிகை நான்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு
ஆசை?
நீலம்.

14.பிடித்த மணம்?
மல்லிகை, சந்தனம்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
யாரையும் அழைக்க போவதில்லை. கிட்டத்தட்ட நான் அழைக்க நினைத்த பதிவர்கள் எல்லோருமே ஏற்கனவே எழுதி முடித்து விட்டனர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
Learning Japanese
என்ற இவரது தொடர் காணொளி பதிவுகள்.
(சீரியஸ் பாஸ்!!!)

17. பிடித்த விளையாட்டு?
குழந்தைகளுடன் விளையாடுவது. எப்போதுமே போரடி(ப்ப)த்ததில்லை.

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
காமெடி படங்கள்-உள்ளத்தை அள்ளித்தா மாதிரி.
சென்சிபிலான படங்கள்-A Beautiful Mind மாதிரி.
ரொமான்டிக் படங்கள்-கடலோர கவிதைகள்,சேது,அலைபாயுதே,மைனே ப்யார் கியா மாதிரி.
பொதுவாகவே மனம் விட்டு சிரிக்க வைக்கும் எந்த மொழி படங்களும் பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த padam?
கடைசியாகப் பார்த்த நல்ல படம் -பசங்க.

21.பிடித்த பருவ காலம் எது?
வெயில் படுத்தி எடுக்காத மிதமான இளம்குளிர்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
ஊருக்கு நல்லது சொல்வேன்-தமிழருவி மணியன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அந்த பிரிவு என்னவரை சார்ந்தது :)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்-தன்னை மறந்து சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு சத்தம்.

பிடிக்காத சத்தம்-குறட்டை.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
திருமணத்திற்கு முன்பு-பெங்களூரு.

திருமணத்திற்கு பின்பு-சென்னை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கிறது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நன்றி மறப்பது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
வைராக்கியம்(சில சமயம்)

கோபம்(பல சமயம்)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இயற்கை எழில் கொஞ்சும் எந்த இடமும்.
அது நியுசிலேந்து,சுவிட்சர்லேண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அடுத்த நாள் பற்றிய கவலை இல்லாமல் சந்தோசமாக வாழ.
இப்போது இருப்பதுபோல் வாழ்நாள் முழுதும் இருக்க.

31.மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுவும் இல்லை. மறைத்து செய்ய ஒன்றும் இருந்ததில்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை எப்போதுமே அப்படியேதான் இருக்கிறது.இருக்கும்.நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.



 பெண்கள் ஏமாற்று பேர்வழிகளா? 4/16/2009

பெண்கள் ஏமாற்று பேர்வழிகள் என்றே ஆண்கள் நிறைய காலம் சொல்லி வந்துள்ளனர்.
இது அதற்கு சான்றாகுமோ?

டிஸ்கி: இந்த காணொளி பெண்ணியவாதிகளுக்கு அல்ல.எனவே
இதை பார்த்த பிறகு என்னை சாட வேண்டாம்.




 என்னைக் கவர்ந்தவர்கள்...!!!! 3/29/2009

அமிர்தவர்ஷிணி அம்மா எழுதிய தலைப்பு இது.சிதறல்கள் தீபாவும் இந்த தலைப்பில் நன்றாகவே எழுதி வருகிறார்.தலைப்பை கடன் வாங்கி எழுத தூண்டியது நான் சந்தித்த சில மனிதர்களே.இந்த பதிவை அவர்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எங்க ஊர் கோலப்பொடி தத்தா:

கரகாட்டக்காரனில் "குடகுமலை காற்றில் வரும்" பாடலில் வருவது போன்ற மாட்டு வண்டியில் தனது மனைவியுடன் கோலப்பொடி விற்க வருவார். "கோஓஓஓலப்பொடியேயேய்" என்று அவர் குரல் தெருவிலிருந்து 100 அடி தள்ளி உள்ளே இருக்கும் எங்கள் வீட்டுக்குள் துல்லியமாக கேட்கும். அப்படி ஒரு கணீர் குரல்.நான் பள்ளி செல்லும் வயதில் பார்க்கும்போதே அவரது ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பச்சை நிற துணியால் மூடப்பட்ட கண்களில் கண்ணாடி அணிந்துகொண்டு, தலை நரைத்து முதுமையை வெகு காலத்துக்கு முன்னமே சந்தித்து விட்டிருந்தார். ஆனால் அந்த வயதிலும் ஒரு நாள் தவறாமல் மாலை 4 மணிக்கு எங்கள் தெரு பக்கம் அவர் குரலை கேட்க முடியும்.தொழிலிலும் கறாரான பேர்வழி அவர் .அவருக்கு நிறைய சொத்து உண்டு என்று ஊரில் சொல்லுவர்.இருப்பினும் சோம்பி உட்காராமல் உழைத்த அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேசன்.கல்லூரி படிக்கும் காலத்திலும்கூட விடுமுறையில் ஊருக்கு வரும்போதும் அவரது குரலிலோ அவரது கம்பீரத்திலோ குறை ஏதும் இருக்கவில்லை.பணி நிமித்தமாக வெளியூர் வந்த பிறகு அவரை அவ்வப்போது கூட பார்க்கும் வாய்ப்பு இல்லை.இவ்வளவு கால இடைவெளியில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டிருக்கலாம்.அயராத உழைப்பு என்றதும் இன்றும் என் நினைவில் வருபவர் இவர்தான்.



 உங்கள் வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்ப நீங்கள் தயாரா? 3/24/2009

பெங்களூரில் பெட்ரோல் பங்கில் இன்று ஒரு அறிவிப்பை பார்த்தேன். வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்பிக்கொள்ள சொல்லி வெளியிடப்பட்டிருந்தது.எப்போதும் போனவுடன் பெட்ரோல் போட்டுவிட்டு அதே வேகத்தில் 2 ரூபாய் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பி கெளம்பி போய்க்கிட்டே இருப்போம்.இதில் இந்த நைட்ரஜன் வாயு வகையறா எப்படி விசேஷமானது?இதை அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டேன்.ரொம்ப நாட்கள் காற்று குறையாமல் சக்கரத்தில் தங்கி இருக்கும் என்றும் அவ்வளவு சீக்கிரம் பஞ்சரே ஆகாது என்றும் கூறினார்.நம்பும்படியாக இல்லை.உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன்.

மறந்து விட்டேனே...முதல் முறை காற்று நிரப்பும்போது ஓவ்வொரு சக்கரத்திற்கும் ஆகும் செலவு 30 ரூபாய்.அதன் பின் ஒவ்வொரு மறுநிரப்பலுக்கும் 10 ரூபாய்.நேப்ட்யுன் என்றொரு நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்திருந்தது.



 நண்டுக்கறியும் பின்னே ஞானும்...!!! 3/22/2009

தற்போது உள்ள குழுவை பிரித்து வேறு வேறு குழுக்களில் ஐக்கியப்படுத்துவதால் அலுவலகத்தில் "குழு மதிய உணவுக்கு"(டீம் லன்ச்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் சென்ற இடம் இந்திரா நகர் டொம்லூர்-ல் அருகில் பார்பெக்யு நேசன்.

இடம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. போன சிறிது நேரத்திலேயே ஸ்டார்டர் உணவுகளுடன் பந்தியை தொடங்கினோம். முதலில் ஒரு சிறிய அடுப்பு மாதிரி இருந்ததை கொண்டு வந்து வைத்தனர். பிறகு அதன் மீது கம்பியில் செருகிய காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை கொண்டுவந்து வைத்துவிட்டு இது 90 சதவிகிதம் ஏற்கனவே வேகவைத்து விட்டாயிற்று. அதன் மேல், பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சாஸ் வகைகளை தடவி மிச்ச 10 சதவிகிதத்தையும் நீங்களே கம்பியை திருப்பி திருப்பி விட்டு வேகவைத்து சாப்பிடுங்கள் என்றுவிட்டு சென்றார் பேரர்.


அட பாவிங்களா நாங்களே சமைத்து நாங்களே சாப்பிட உங்களுக்கு காசா என்று நினைத்துகொண்டே, கம்பியை திருப்பி திருப்பி புரட்டிபோட்டு சாப்பிட்டு முடித்தோம். கொண்டு வந்து வைக்கிறார்கள் வைக்கிறார்கள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்(அதே ரெண்டு ஐட்டங்கள்தான்). நம்ம மேலதான் எவ்வளவு அக்கறை என்று நினைத்தால், இங்கு ஆறேழு முறை வந்த எங்கள் பாஸ், இது அவர்களது வியாபார தந்திரம்.இந்த உணவு வகைகளியே வயிற்றை ரொப்பி விட்டால் மெயின் ஐட்டங்களுக்கு அவ்வளவாக நமது வயிற்றில் இடம் இருக்காது. மற்ற உணவு வகைகளை கம்மியாய் எடுத்துக்கொள்வோம். அது அவர்களுக்கு மிச்சமாகும். அதை இரவுக்கு உபயோகப்படுத்திகொள்வர் என்றார். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் எங்களை பேரர் கவனித்த "கவனிப்பு" என்னமோ யோசிக்கவேண்டியதாகவே இருந்தது.


இதில்
எங்கள் குழுவில் உள்ள ஜுனியர் பையன் ஒருவன் என்னமோ ரொம்ப சீரியஸாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். எல்லாரும் வாங்க மெயின் கோர்ஸ் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதுதான் தாமதம் என்னது இனிமே தனியா மெயின் கோர்சுன்னு ஒன்னு இருக்கா என்று அதிர்ச்சி அடைந்தான். அது வரைக்கும் அவன் உள்ள தள்ளுனதே அந்த கடைக்கு அன்று நஷ்ட கணக்குதான். அவ்வளவு உள்ளே தள்ளியாயிற்று. இதில் இனிதான் மெயின் கோர்ஸ் என்றதும் அடடா கொஞ்சம் கம்மியா சாப்பிட்டு இருக்கலாமே என்ற கவலை அவனுக்கு.

ஒரு வழியா அவங்க அவங்க தட்ட எடுத்துகிட்டு ஜெயில் கைதிங்க மாதிரி வரிசையில நின்னோம்.கிடைத்த வரை அள்ளி போட்டுக்கொண்டவர்களும், தட்டின் விளிம்பு வரையில் நிரப்பிகொண்டவர்களும், நாசூக்கு பார்த்து அளவாய் பரிமாரிக்கொண்டவர்கள் என ஒவ்வொருவரின் உணவுப்பழக்கமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சைவம் அசைவம் என இரண்டு பிரிவுகளில் உணவு வைக்கப்பட்டிருந்தாலும் சைவத்தின் பக்கம் கூட்டம் கொஞ்சம் குறைவுதான். நானும் என் பங்குக்கு சிறிது பிரியாணி, நண்டு வறுவல் என எடுத்து வந்தேன்.


இது வரைக்கும் சிக்கன் மட்டன் மீன் தவிர வேறு எதையும் சாப்பிட தோணியதில்லை. ஏதோ அந்த இனம் அழிந்து போகாமல் இருக்க நம்மால் ஆனது. தின்பதில் நோகாமல் தின்னப்பழகியதாலும் இருக்கலாம். நண்டு வறுவல் நான் ருசி பார்த்ததே இல்லை (இப்படி வரப்போ எல்லாம் ட்ரை பண்ணினால்தான் உண்டு...ஹிஹி). ஏதோ பந்தாவாக எடுத்து வந்து விட்டாலும் அதை சாப்பிடுவது எப்படி என்று வேறு தெரியவில்லை.

எனக்கு எதிரே உட்கார்ந்து இருந்த தோழி வெளுத்து கட்டினார்.எப்படி சாப்பிடுவது என்று கேட்டதற்கு தாராள மனதுடன் தனது ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி செய்முறை விளக்கம் கொடுத்தார். சொன்னபடியே நானும் திசைக்கொன்றாக கொடுக்கை பிளக்க முயற்சி செய்ததில் ஒரு பாதி அரை அடிக்கு எம்பி குதித்து தட்டிலும் மீதி பாதி தரையிலுமாக கிடந்தது. வடிவேலு கணக்கா இது உனக்கு தேவையா என்று என்னை நானே நொந்துகொண்டே மிச்ச உணவு வகைகளை ருசி பார்த்தேன். ருசி அப்படி ஒன்றும் ஆகா ஓகோவென இல்லையென்றாலும் சாப்பிடும் வகையில் இருந்தது.


அதன் பிறகு டெசர்ட் பகுதியில் ஆளாளுக்கு வேட்டையாடு விளையாடுதான். தட்டுகொள்ளா ஐஸ்கிரீம், குலாப்ஜாமூன், கேக் என்று தட்டை நிறைத்துக்கொண்டு வந்த நண்பரை பார்த்து போதுமா என்று கேட்டதற்கு இன்னைக்குன்னு பார்த்து எனக்கு ஒடம்பு சரி இல்லை(காதில் இஸ்திரி பெட்டியை சூட்டோடு வைத்து விட்டதால் அன்று விடுப்பு எடுத்து இருந்தவர் அவர். நாளை மதியம் டீம் லன்ச் என்று முந்தின நாள் கேள்விப்பட்டதும் அடித்துப்பிடித்து அன்று அலுவலகம் வந்தாயிற்று :)) அதான் கம்மியா சாப்பிடுகிறேன் என்று ரொம்ப பீல் பண்ணிட்டு போனார்.


2 மணிநேரத்துக்கு மேல் ஆகியும் யாரும் கிளம்ப தயாராய் இல்லை. இரை உண்ட மலைப்பாம்பை போல் நெளிந்துகொண்டு சோபாவில் சாய்திருந்தனர். கடைக்காரனும் கரண்டை விட்டு விட்டு அணைப்பது, வேறு என்ன வேண்டும் என கேட்பது என்று எப்படி எப்படியோ யோசித்து யோசித்து முயற்சி செய்தாலும் அசையாமல் உட்கார்ந்து கடுப்பேற்றிவிட்டு ஒரு வழியாய் புறப்பட்டு அலுவலகம் வந்து அடைந்தோம்.